×

மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம் 803 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம்-கலெக்டர் நேரில் ஆய்வு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி 803 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த நன்செய் இடையாறு கிராமத்தில் முன்றரை வயது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அந்த சிறுமியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த சிறுமி சேர்க்கப்பட்டார். அங்க அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இல்லை என்பது தெரிந்தது. ஆனால், வைரஸ் காய்ச்சலினால் தாக்கம் அதிகம் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நன்செய் இடையார் பகுதியில், சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் காய்ச்சல் பரிசோனை மேற்கொண்டனர். 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.இந்த மருத்துவமுகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது: நன்செய்இடையாறு பகுதியில் காய்ச்சல் கட்டுபடுத்த சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை, மாலை இரு நேரங்களிலும் புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, காய்ச்சல் நோயாளிகள் உள்ளனரா என பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ முகாமில் இரண்டு பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் பற்றி பீதி அடைய தேவை இல்லை.

தற்போது பருவநிலை மாற்றத்தினால் பல்வேறு இடங்களில் டெங்கு, மலேரியா போன்றவை கொசுக்களின் மூலம் பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள குடிநீர் பாத்திரங்கள், தொட்டிகள், மண்பானைகள், சிமெண்ட் தொட்டிகளில் கொசு புகாத வண்ணம் நன்கு மூடி வைத்து பராமரிக்க வேண்டும். கொசு புழுக்கள் ஏற்பட்டால், உடனடியாக தண்ணீரை கவிழ்த்து கொசு புழுக்களை அழித்து விட வேண்டும்.

வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் அறிகுறி கண்டவுடன் உடனடியாக சென்று சிகிச்சை பெற வேண்டும். இதனால் நோயின் தாக்கத்திலிருந்து தவிர்க்க முடியும்.

தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் 3 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்காமல் கொசு புகாத வண்ணம் மூடி வைத்து பராமரிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, 15 வட்டாரங்களிலும் 318 கொசு ஒழிப்பு பணியாளர்களும், பேரூராட்சி பகுதிகளில் 190 கொசு ஒழிப்பு பணியாளர்களும், நகராட்சியில் 295 கொசு ஒழிப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை, மருந்து தெளிக்கப்பட்டு புகை மருந்து அடிக்கும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Namakkal : Prevention of dengue is actively going on in Namakkal district. In this regard, 803 mosquito control workers have been appointed
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் ஓரிரு...